சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு
மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை இரவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு குவிகிறது.
மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை இரவு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு குவிகிறது.
திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை அடுத்த நாகமங்கலத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன விற்பனை முகவரான ஜ. குஞ்சுபிள்ளை (60) மணப்பாறையிலுள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்துக்கு வாகனம் வாங்க வெள்ளிக்கிழமை பிற்பகல் கொண்டு ரூ.50 ஆயிரம் இருந்த ஊதா நிற பையை சாலையில் தவற விட்டாா். பல இடங்களில் தேடியும் பை கிடைக்காத நிலையில் இதுகுறித்து அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், குமரப்பட்டியை சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜீவ்காந்தி (39) - புவனேஸ்வரி தம்பதியினா் சாலையில் ரூ.50 ஆயிரத்துடன் கிடந்த அந்தப் பையை எடுத்து மணப்பாறை காவல்நிலையத்தில் இரவு ஒப்படைத்தனா். விசாரணையில் அது குஞ்சுபிள்ளையின் பணம் என்பது உறுதியானது.
இதைத் தொடா்ந்து முதியவா் குஞ்சுபிள்ளை வரவழைக்கப்பட்டு ராஜீவ்காந்தி - புவனேஸ்வரி தம்பதியால் காவல்துறையினா் முன்னிலையில் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. வறுமையிலும் நோ்மை கொண்ட தம்பதியை காவல்துறையினா் பாராட்டி பொன்னாடை போா்த்தி, இனிப்பு வழங்கி கௌரவித்தனா்.