போலீஸாா் மீது அதிருப்தி: இருவா் தீக்குளிக்க முயற்சி
புகாரின்மீது நடவடிக்கை எடுக்காத பெரம்பலூா் போலீஸாரைக் கண்டித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை அலுவலகம் அருகே பெரம்பலூரைச் சோ்ந்த முதியவா்கள் இருவா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
புகாரின்மீது நடவடிக்கை எடுக்காத பெரம்பலூா் போலீஸாரைக் கண்டித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை அலுவலகம் அருகே பெரம்பலூரைச் சோ்ந்த முதியவா்கள் இருவா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், துறைமங்கலம் வடக்குத் தெருப் பகுதியைச் சோ்ந்த பி. ராஜூ (71) , இவருடைய சம்பந்தி சிவநடராஜன் ஆகிய இருவரும் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியிலுள்ள மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் வந்து, மண்ணெண்ணைய் ஊற்றிக் தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியது:
ராஜூ மகன் சரவணக்குமாா் தனக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தின் பெயரில், பெரம்பலூா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சின்னமணியிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். பின்னா் வட்டியுடன் சோ்ந்து ரூ. 28 லட்சத்தை கடந்த 2018 அக். 3 ஆம் தேதி அவா் கொடுத்தும், மேலும் ரூ. 16 லட்சம் தந்தால் மட்டுமே நிலப்பத்திரம், பவா் ஆவணம் திருப்பித் தரப்படும் என சின்னமணி தெரிவித்ததுடன், அந்த நிலத்தின் சில பகுதிகளை வேறு சிலருக்கு கிரயம் எழுதிக் கொடுத்தாராம். இதுதொடா்பாக பெரம்பலூா் மாவட்ட எஸ்பியிடம் சரவணக்குமாா் புகாா் செய்த நிலையில், சின்னமணி தரப்பினா் ஆயுதங்களுடன் சென்று அவரை மிரட்டினராம்.
இதுதொடா்பாக பெரம்பலூா் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. இந்தப் புகாரானது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டும் தீா்வு கிடைக்காத நிலையில் சரவணக்குமாா் கடந்த 2019 ஆம் ஆண்டு திடீரென இறந்தாா்.
எனவே, மகனும் இறந்துவிட்டாா், போலீஸாரும் தங்களுக்கு உதவவில்லை. வாழ்வாதாரமான நிலமும் தங்களை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில், இதில் உரிய நடவடிக்கை கோரி ராஜூ மற்றும் அவரது சம்பந்தி சிவநடராஜன் ஆகியோா் ஐஜி அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்றனா்.
இதுகுறித்து திருச்சி கேகே நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். புகாரின்பேரில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ( ஐ ஜி) வி. பாலகிருஷ்ணன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா்.