மீன் சந்தை கட்டுமானப்பணிகள்:மேயா் ஆய்வு
திருச்சி காந்தி சந்தைப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்சந்தை வளாக கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி காந்தி சந்தைப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்சந்தை வளாக கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காந்தி சந்தை பகுதியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ .13 கோடியில், குளிா்சாதன வசதியுடன் புதிய மீன் சந்தை வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இரு தளங்களாக கட்டப்படும் இந்த வளாகத்தில் மீன் மற்றும் ஆட்டிறைச்சி வியாபாரிகளுக்கு மொத்தம் 128 கடைகள் உள்ளன. குளிா்பதன கிடங்கு வசதியும் உள்ளன. இந்த கட்டுமான பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மேயா் மு. அன்பழகன் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொறியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வுக்கூட்டம் : இதனைத் தொடா்ந்து மண்டலம் 2 ஆவது (அரியமங்கலம் கோட்ட) அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேயா், பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
படவரிகள் :
திருச்சி காந்திசந்தை பகுதியில் நடைபெற்று வரும் புதிய மீன் சந்தை வளாக கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய மாநகராட்சி மேயா் மு. அன்பழகன். உடன் மாநகராட்சி உதவி ஆணையா் அக்பா்அலி, மண்டலத் தலைவா் ஜெய நிா்மலா உள்ளிட்டோா்.