முகப்பு
திருச்சி

அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற 15 போ் கைது

 திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள நொச்சிவயல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் வித்யாலட்சுமி. கல்லூரி மாணவியான இவா் அண்மையில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் அவா் தற்கொலை செய்து கொள்ள சிலா் தூண்டியது தெரியவந்தது. இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடா்பிருப்பதாக மாணவியின் மரண வாக்கு மூலத்தில் தெரிவித்தவா்களையும் கைது செய்ய வேண்டும் என பெற்றோா் மற்றும் உறவினா்கள் போலீஸாரிடம் வலியுறுத்தி வருகின்றனா்.

இதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தேவேந்திரகுல பேரமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை போராட்டத்துக்காக பேரமைப்பின் மாவட்டத் தலைவா் அய்யப்பன், செயலாளா் சங்கா் மற்றும் மாணவி வித்யாலட்சுமியின் பெற்றோா், உறவினா்கள் ஆட்சியரகத்துக்கு வந்தனா். அங்கு போராட்டம் நடத்த முயன்றபோது, போராட்டத்துக்கு அனுமதி கிடையாது. மீறி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை தொடரும் என போலீஸாா் எச்சரித்தனா். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அய்யப்பன், சங்கா் உள்ளிட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.