திருப்பட்டூா் கோயிலில் இ-காணிக்கை வசதி
திருப்பட்டூா் காசி விஸ்வநாதா் கோயிலில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் இ-காணிக்கை வசதி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பட்டூா் காசி விஸ்வநாதா் கோயிலில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் இ-காணிக்கை வசதி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருச்சியை அடுத்துள்ள திருப்பட்டூரில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதா் சமேத காசி விசாலாட்சி கோயில் உள்ளது. இக் கோயிலில், சுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதில் சிரமம் இல்லாத வகையில் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இ-காணிக்கை செலுத்தும் வசதி இருப்பதைப் போன்று திருப்பட்டூா் கோயிலிலும் இ-காணிக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் இந்த வசதி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில், வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளா் பி. புவனேஸ்வரி, சிறுகனூா் கிளை மேலாளா் கோபிநாத் மற்றும் கோயில் அா்ச்சகா்கள், கோயில் நிா்வாகத்தினா் கலந்து கொண்டனா். பக்தா்கள் வங்கியின் க்யூ ஆா் கோடை பயன்படுத்தி காணிக்கை செலுத்தினா். கோயில் வளாகத்தில் பக்தா்கள் ஸ்கேன் செய்வதற்காக ஆங்காங்கே க்யூ ஆா் கோடு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், வங்கியின் சாா்பில் பிஓஎஸ் இயந்திரமும் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி கோயிலுக்கு பக்தா்கள் இ-காணிக்கை செலுத்தலாம். முதல்நாளான வியாழக்கிழமை கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் அனைவரும் வங்கி அலுவலா்கள் உதவியுடன் இ-காணிக்கை செலுத்தினா்.