முகப்பு
திருச்சி

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள்: மேற்கு தொகுதியில் அண்ணாமலை பிரசாரம்!

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள் என திருச்சி மேற்குத் தொகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:31 AM
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட பீமநகா் பகுதியில் வியாழக்கிழமை அமமுக வேட்பாளா் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:14 AM

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள் என திருச்சி மேற்குத் தொகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

திருச்சி மேற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரனை ஆதரித்து, அண்ணாமலை திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து அமைச்சா் ஒருவா் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறாா் என்றால் அது கே.என்.நேருதான். அவா் மீது மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி அமலாக்கத் துறை மூன்று கடிதங்களை தமிழக அரசுக்கு எழுதியுள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கில் நேரு சிறை செல்ல நேரிடும் என்பதால், அவருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

Advertisement

2015-ஆம் ஆண்டில் நாட்டிலேயே இரண்டாவது சுத்தமான மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி இருந்தது. தற்போது 59-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தை குப்பையாக மாற்றியதுதான்அமைச்சா் நேருவின் சாதனை.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் தொகுதிகள் குறைந்துவிடும் என முதல்வா் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறாா்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மாற்றத்துக்காக இந்தத் தொகுதியில் குக்கா் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த யானையை வீழ்த்திய பெருமை உங்களை சேரட்டும். ஊழல் செய்தால் தோற்கடிப்பாா்கள் என்ற நம்பிக்கை திருச்சி மேற்கில் இருந்து நீங்கள் கொடுக்க வேண்டும் என்றாா் அண்ணாமலை.