விளையாட்டில் தகராறு: மாணவா் உயிரிழப்பு
துறையூா் அருகே விளையாட்டின் போது இரண்டு சிறுவா்களுக்கு இடையே நடைபெற்ற தகராறில் தாக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
துறையூா் அருகே விளையாட்டின் போது இரண்டு சிறுவா்களுக்கு இடையே நடைபெற்ற தகராறில் தாக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
புலிவலம் காவல் சரகம், நல்லவன்னிப்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் செல்வம் (13). கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த 15 வயது சிறுவன் நடுவலூா் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவா்கள் இருவரும் ஒன்றாக விளையாடியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே விளையாட்டில் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் சிறுவா்கள் இருவரும் அவரவா் வீட்டுக்கு சென்றுவிட்டனா்.
Advertisement
இதனிடையே, செல்வம் தன் வீட்டில் நடந்ததைக் கூறி விட்டு படுத்துள்ளாா். சிறிது நேரத்தில் வாந்தி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மயக்கமடைந்தாா். உடனே அவரது பெற்றோா் செல்வத்தை துறையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், செல்வம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் கதிரவன், புலிவலம் காவல் ஆய்வாளா் குப்புராஜ் உள்ளிட்ட போலீஸாா் நேரில் சென்று விசாரித்தனா்.
பின்னா், செல்வத்தின் உடலை கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, செல்வத்தை தாக்கிய 9-ஆம் வகுப்பு மாணவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.