முகப்பு
வேலூர்

"தடம்' மாறும் அரசுப் பேருந்துகள்!

வேலூர், ஜூலை 30: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் "வழித்தடம்' மாறுவதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:39 PM
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2023 at 12:12 PM

வேலூர், ஜூலை 30: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் "வழித்தடம்' மாறுவதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அந்தந்தப் பகுதிகளின் முக்கிய திருவிழாக்கள், சிறப்பு நாள்கள், விடுமுறை நாள்களின்போது "சிறப்புப் பேருந்துகள்' இயக்கப்படுகின்றன.

 பெüர்ணமி கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கும், அமாவாசையன்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூருக்கும் வேலூரிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

 மாவட்டத்தின் வேறு பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்துகள் திருப்பிவிடப்பட்டு இச் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

 மேலும், ஆளும் கட்சியின் அரசியல் மாநாட்டுக்காக ஏராளமான பேருந்துகள் திருப்பிவிடப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

 இதனால், அப் பேருந்துகளில் தினசரி பயணித்து வந்த மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது பற்றி போக்குவரத்துக்கழகம் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் பயணிகள்.

 இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வேலூரிலிருந்து சென்னைக்கு 100 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னையிலிருந்து பேரணாம்பட்டு வரை செல்ல வேண்டிய பேருந்தில், வேலூர் வரை மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது.

 வேலூர் வரும் இப் பேருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி விடுகிறது. இதனால், வேலூரில் இறங்கும் பேரணாம்பட்டு பயணிகள், தங்கள் ஊருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் காத்திருக்கும் நிலை உள்ளது.

 "எக்ஸ்பிரஸ்' எனும் பெயரில் இயக்கப்படும் இதுபோன்ற பேருந்துகளில் கூடுதலாக ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இவை சாதாரண கட்டணப் பேருந்தைப் போல அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 எனவே, கிராமப்புறங்களுக்குச் செல்லும் பேருந்துகளை இவ்வாறு மாற்றுப் பேருந்துகளாகத் திருப்பிவிடக் கூடாது; சிறப்புப் பேருந்துகள் இயக்கத்துக்கு எனத் தனியாக "மாற்றுப் பேருந்து' வசதிகளை அரசு போக்குவரத்துக் கழகம் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 அச்சத்தில் பயணிகள்

 தொலைதூரப் பேருந்துகளில் ஒரே ஓட்டுநர், நடத்துநர் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். பல கிலோ மீட்டர் தூரம் பயணித்த பின்பு இவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். ஆனால், இவர்களைத் தொடர்ந்து பணியாற்றச் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

 தூக்கமின்மை காரணமாக ஓட்டுநர்கள் கண் அயர்வதால், நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்கின்றனர் பயணிகள்.

 எனவே, பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு போதிய ஓட்டுநர், நடத்துநர்களை நியமித்து நல்ல சேவையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.