சுடுகாட்டுப் பாதைக்கு நேர்ந்த அவலம்
செய்யாறு, டிச.23: செய்யாறில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் சுடுகாட்டுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் ச
செய்யாறு, டிச.23: செய்யாறில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் சுடுகாட்டுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில், கொடநகர் மற்றும் திருவோத்தூர் வார்டு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தவிர மற்ற பகுதியில் யாராவது இறந்தால் செய்யாற்றின் மேற்கே உள்ள சுடுகாட்டில்தான் புதைக்கின்றனர். இதற்காக காந்தி சாலை, மார்க்கெட், காமராஜ் நகர் வழியாக கால்வாயை கடந்து சென்று சுடுகாட்டுப்பாதையை அடைவது வழக்கம்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் அந்த பாதையின் குறுக்கே 10 அடி உயரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் சடலத்தை எடுத்துச் செல்பவர்கள், காந்திசாலையில் இருந்து மார்க்கெட் டோல்கேட் (தேவி தியேட்டர்) சென்று, புறவழிச்சாலையை கடந்து, சுமார் ஒரு கி.மீ. சுற்றிக்கொண்டு சுடுகாட்டுப்பாதையை அடைய வேண்டும்.
மேலும் காமராஜர் நகர் பகுதியில் இருந்து நீரோடை செல்லும் வழியில் செங்கல் சூளைபோடுபவர்கள் பெருமளவில் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சுடுகாட்டுப் பாதை குறுகலாகி சடலத்தை எடுத்துச்செல்ல சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.
எனவே காமராஜ் நகர் வழியாக நீரோடைக்கால்வாயின் மீது புறவழிச்சாலைக்கு செல்ல வசதியாக சிறு பாலம் அமைக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை அகலப்படுத்த வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.