அருகருகே சமையல் கூடம், கழிவறை ஆதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் அவலம்
திருவண்ணாமலை, ஜூன் 29: கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஆதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகருகே கழிவறையும், சத்துணவு சமையல் கூடமும் அமைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கலசப
திருவண்ணாமலை, ஜூன் 29: கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஆதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகருகே கழிவறையும், சத்துணவு சமையல் கூடமும் அமைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கலசப்பாக்கம் ஒன்றியத்தின் முக்கிய ஊர்களில் ஒன்றாக ஆதமங்கலம் புதூர் விளங்குகிறது. போளூரில் இருந்து மேல்சோழங்குப்பம் செல்லும் சாலையில் உள்ள இவ்வூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
ஆதமங்கலம்புதூரைச் சுற்றி மேல்சோழங்குப்பம், பேட்டை, வில்வாரணி, காந்தாரபாளையம், சீராம்பாளையம், கிடாம்பாளையம், நவாப்பாளையம், சாலமேடு, கேட்டவரம்பாளையம், கெங்கமகாதேவி, கட்டவரம் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 1967-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இப்பள்ளியில் தற்போது 24 ஆசிரியர்களும், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர்.
Advertisement
ஆனால் இப்பள்ளியில் முறையான குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. ஆசிரியர்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் திறந்தவெளி மைதானத்தையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கழிவறை அருகிலேயே சத்துணவு சமையல் கூடம் உள்ளது. கழிவறை தொட்டியில் உள்ள தண்ணீரையே பாத்திரங்கள் கழுவ பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 7 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
போதிய ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்டவை இப்பள்ளிக்கு அவசரத் தேவை என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.