போக்குவரத்து நெரிசலில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை, டிச. 25: திருவண்ணாமலை நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலை தரிசிக
திருவண்ணாமலை, டிச. 25: திருவண்ணாமலை நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலை தரிசிக்கவும், பெüர்ணமி கிரிவலம் செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அண்மையில் கார்த்திகை மகாதீபத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.
தற்போது சபரிமலை, மேல்மருவத்தூர் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் இங்கு அதிக அளவில் வருகின்றனர். இதனால் நகருக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை நகரில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சரக்கு வாகனங்கள் உள்ளே வரக்கூடாது என காவல்துறை தடை செய்துள்ளது. இது தொடர்பாக சரக்கு வாகன உரிமையாளர்கள் - காவல்துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டப்பட்டு வாகனங்கள் நுழையக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவு அலட்சியப்படுத்தப்பட்டு, கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களிலும் பெரிய தெரு, திருவூடல் தெரு, தேரடி வீதி, பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருள்களை இறக்குகின்றனர். இதனால் பிற வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
காவல்துறையும் இப் பிரச்னையை தீர்க்க போதிய நடவடிக்கை எடுக்காத நிலையே காணப்படுகிறது.
மேலும் நெரிசல் மிகுந்த சின்னக்கடை வீதி ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பையும் எவரும் பொருட்படுத்துவதில்லை. பெரிய தெரு, காந்தி சிலை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்ற விதி மீறப்பட்டு ரவுண்டானா பகுதியில் இருந்தும் வாகனங்கள் தங்கள் விருப்பம் போல் செல்கின்றன.
தானியங்கி சிக்னல்கள்
மேலும் ரவுண்டானா, பெரியார் சிலை, காமராஜர் சிலை பகுதிகளில் தானியங்கி சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அவை வெறும் காட்சிப் பொருள்களாகவே உள்ளன. மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே அவை இயக்கப்படுகின்றன.
முக்கிய சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளை சீரமைத்தால் பாதசாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
திருக்கோவிலூரில் இருந்து வேலூருக்கு செல்லும் வாகனங்கள் எளிதாக பைபாஸ் சாலை மூலம் சென்று விடுகின்றன. ஆனால் புதுச்சேரியில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் நகரின் உள்ளே தான் வந்து செல்ல வேண்டி உள்ளது.
புதுச்சேரி சாலையில் இருந்து செங்கம் சாலைக்கு செல்வதற்கான இணைப்புச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து சேலம், செங்கம், தண்டராம்பட்டு செல்லும் பஸ்கள் வழக்கமாக செல்லும் கோபால் தெரு சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்தால் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
எனவே இம் மாவட்டத்தின் அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.