ஆம்பூர், ஜன. 29: அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து சீட்டை மருத்துவமனைகளில் உள்ள மருந்தகத்தில் கொடுக்கும்பொழுது, சில மாத்திரைகளை வெளியே உள்ள மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"இந்தத் தட்டுப்பாடு காரணமாக, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மருந்துக் கடைகளில் பணம் கொடுத்து மருந்து வாங்கும் அளவுக்கு சக்தி இல்லாதவர்கள், நோயுடனே காலம் கடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சர்க்கரை நோய்க்கு வழங்கப்படும் மாத்திரைக்கு அதிக அளவு தட்டுப்பாடு உள்ளது. இம்மாத்திரைகள் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது' என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
"மருந்து விநியோகம் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், இருப்பு இல்லாத மாத்திரைகளை அந்தந்த அரசு மருத்துவமனைகள் வெளி மார்கெட்டில் வாங்கிக் கொள்வதற்கு தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. சுமார் 26 வகை மருந்துகளுக்கு இச்சான்று வழங்கப்பட்டுள்ளது' என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சந்திரநாதனை கேட்டபோது, அவர் கூறியது:
அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மாத்திரைகள் இருப்பு இல்லை.
மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் இல்லாததால் நோயாளிகளுக்கு வழங்க முடியவில்லை.
இருந்தாலும் வெளி மார்க்கெட்டில் வாங்கினாலும் அவை ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பு வைக்க முடிகிறது. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது என்றார்.
இருப்பினும், ஏழை மக்கள் சிகிச்சை பெற தடையின்றி மருந்து விநியோகம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.