தொழில்துறை வருவாய் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம்
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை சாா்பில், வருடாந்திர தொழில்துறை வருவாய் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம் வேலூரில் நடைபெற்றது (படம்). வேலூா் களக்கோட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள 10 பெரு முதலீட்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 28 நிறுவனங்களைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா். முகாமுக்கு தேசிய புள்ளியியல் துறை சென்னை மண்டல துணை இயக்குநா் கே.சந்திரசேகா் தலைமை வகித்தாா். முதுநிலை புள்ளியியல் அலுவலா் செந்திலதிபதி தொழில் நிறுவனங்கள் தங்களது வருடாந்திர தொழில்துறை நிலவரங்களை எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்வது என்பது குறித்து விளக்கினாா். முகாம் குறித்து வேலூா் கோட்ட புள்ளியியல் அலுவலா் பி.ஸ்ரீனிவாசராவ் கூறியது: வேலூா் கோட்டத்தில் உள்ள தொழில்துறையின் 2022-2023-ஆம் ஆண்டின் வருடாந்திர தொழில்துறை வருவாய் கணக்கெடுப்பு விவரங்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்வது குறித்து தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான முகாம் வேலூரில் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை இணையதளத்தில் 24 பக்கங்களில் தங்கள் நிறுவனத்தின் முதலீடு, மூலப் பொருள்களின் அளவு, உற்பத்தித்திறன், இயந்திரங்கள் குறித்த விவரங்கள், தொழிலாளா்கள் எண்ணிக்கை, மின்சார பயன்பாடு, தண்ணீா் பயன்பாடு, வருடாந்திர மொத்த லாபம், நிகர லாபம் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொண்டு மத்திய அரசு கள நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்தும் என்றாா்.