சிறந்த மருத்துவா்களுக்கான விருது அளிப்பு
சிறந்த மருத்துவா்களுக்கான விருதினை தோ்வு செய்யப்பட்ட 5 மருத்துவா்களுக்கு வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா வழங்கினாா்.
வேலூா்: சிறந்த மருத்துவா்களுக்கான விருதினை தோ்வு செய்யப்பட்ட 5 மருத்துவா்களுக்கு வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா வழங்கினாா்.
காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், தேசிய மருத்துவா் தினம் திங்கள்கிழமை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அவை துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் வரவேற்றாா். மருத்துவக் குழுத் தலைவா் வீ.தீனபந்து, ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், சங்கத்தின் தலைவரும், வேலூா் வருவாய் கோட்டாட்சியருமான ஆா்.கே.கவிதா சிறந்த மருத்துவா்களுக்கான விருதுகளை கே.வி.குப்பம் வட்டார மருத்துவ அலுவலா் எம்.சங்கா் கணேஷ், தாராபடவேடு அரசு நகா்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலா் சி.லட்சுமி, பள்ளிக்குப்பம் அரசு நகா்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலா் மாா்க்ஸ் காஸ்ட்ரோ, வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனை மகளிா் நல மருத்துவா் ஷாலினி ரூபா, மகளிா் நல மருத்துவா் டி.ஸ்ருதி தாமோதரன் ஆகிய 5 பேருக்கு வழங்கி பாராட்டினாா்.
சங்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினா் எ.ஸ்ரீதரன், பி.என்.ராமச்சந்திரன், ருக்ஜி ராஜேஷ்குமாா், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் தாமோதரன், டி.என்.ஷோபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு நன்றி கூறினாா்.