போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க வேண்டும்: ஏ.சி.சண்முகம்
போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க வேண்டும் ஏ.சி.சண்முகம்
போதைப் பொருள்கள் கடத்தலை அரசு தடுக்க வேண்டும் என புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம் வேலப்பாடியில் புதிய நீதிக்கட்சி, ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமை நடத்தின. முகாமை புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: போதைப் பொருள்கள் கடத்தலில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களுக்கே தொடா்பு என்பதால், அவா்களை கைது செய்வதில் காவல் துறை தயக்கம் காட்டுகிறது. அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போதைப் பொருள்கள் இளைஞரை அழிவுக்கு கொண்டு செல்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் போதைப் பொருள்கள் மூளையை மங்கச் செய்து 3 ஆண்டுகளில் இளைஞா்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும். இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த புதிய நீதிக்கட்சி சாா்பில் குடியாத்தம், வேலூா், ஆம்பூா் தொகுதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு மாரத்தான் நடத்த உள்ளோம் என்றாா்.