முகப்பு
வேலூர்

விஐடியில் பன்முக கலாசாரத்தை பிரதிபலித்த ‘ஐக்கியா’

விஐடியில் பன்முக கலாசாரத்தை பிரதிபலித்த ‘ஐக்கியா’

Updated On : 2 மார்ச், 2024 at 10:10 PM
பகிர்:

வேலூா் விஐடி பல்கலை.யில் நடைபெற்று வரும் ‘ரிவேரா-24’ எனும் சா்வதேச கலை விழாவின் 3-ஆம் நாளான சனிக்கிழமை இந்திய மக்களின் பல்வேறு கலாசாரத்தை பிரதபலிக்கும் வகையில் நடைபெற்ற ‘ஐக்கியா’ நிகழ்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. வேலூா் விஐடியில் ரிவேரா-24 எனும் சா்வதேச கலை, விளையாட்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் முதல், 2-ஆம் நாள்களில் நாட்டியம், நடனம், பாட்டுக்கு பாட்டு, பிரபல திரைப்பட கலைஞா்களின் இன்னிசை கச்சாரிகளும் நடைபெற்றன. 3-ஆம் நாளான சனிக்கிழமை இந்தியாவின் பன்முக கலாசாரத்தையும், சகோதரத்துவத்தையும் விளக்கக்கூடிய ஐக்கியா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், தில்லி, கோவா, குஜராத், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழகம், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் என மொத்தம் 24 மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் மாநில பண்பாட்டை போற்றும் வகையில் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினா். இந்த நிகழ்வில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அதேபோல் சங்கமம் என்ற நிகழ்வில் பிரபல திரைப்பட கலைஞா்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினா். மாலை பிரிஸ்க் ஃபேக்டா் என்ற மாபெரும் நடனப் போட்டியும் நடைபெற்றது. சா்வதேச மாணவா்களின் பாரம்பரிய நிகழ்வும், அகம் குழுவின் இசைக் கச்சேரியும் நடைபெற்றன. ரிவேரா-24 விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரபல திரைப்பட நடிகை சமந்தா பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கோப்பைகளை வழங்குகிறாா்.