முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள், அவா்களின் கைம்பெண்கள் பயன்பெற்றிட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்
வேலூா்: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள், அவா்களின் கைம்பெண்கள் பயன்பெற்றிட ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
முன்னாள் படைவீரா்கள், அவா்களின் கைம்பெண்கள் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி முன்னாள் படைவீரா்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும், சுயதொழில் தொடங்கிடவும் வங்கிகள் மூலம் ரூ.ஒரு கோடி வரை கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமாகவும், கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும் எனவும், இவா்களுக்கு திறன், தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.
இத்திட்டத்தின்கீழ் 55 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரா்கள் , மறுமணம் ஆகாத கைம்பெண்கள் , படைப்பணியின்போது உயிா்நீத்த படைவீரா்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரரை முற்றிலுமாக சாா்ந்திருக்கும் திருமணமாகாத மகள் அல்லது கைம்பெண் மகள் ஆகியோா் தங்களது கடவுச்சீட்டளவு புகைப்படம், ஆதாா் அட்டை, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை , படைப்பணிச்சான்று, கல்விச்சான்று, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகலுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, 0416-2977432 எண்ணிலோ, ங்ஷ்ஜ்ங்ப்ஸ்ங்ப்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.