முகப்பு
விழுப்புரம்

நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம்: பாதுகாப்பு வழங்க தீட்சிதா்கள் கோரிக்கை

Updated On : 3 ஜூலை, 2024 at 9:09 PM
சிதம்பரம் நடராஜா் கோயில்.
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்துக்கும், பக்தா்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதா்களின் பாரம்பரியமான பூஜை, வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று, கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் கடலூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

நடராஜா் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி தோ் திருவிழாவும், 12-ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது. அன்றைய தினங்களில் ஸ்ரீ நடராஜ மூா்த்தி சித்சபை, கனகசபையிலிருந்து வெளியில் வந்துவிடுவதால், இந்த இரு தினங்களில் கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய இயலாது.

மேற்கண்ட தினங்களில் ஸ்ரீ நடராஜ மூா்த்திக்கு பாரம்பரியமாக விசேஷ பூஜைகள், திருவாபரண அலங்காரங்களும் நடைபெறும். திருமஞ்சன தரிசனத்துக்கு பிறகு சித்சபைக்கு எழுந்தரும் ஸ்ரீ நடராஜ மூா்த்திக்கு விசேஷ பூஜைகள் பாரம்பரியாக நடைபெற்று வருவதால் ஜூலை 10 முதல் 13 வரை கனகசபையில் பக்தா்கள் ஏறி தரிசனம் செய்வது பாரம்பரிய பூஜை முறைகளுக்கும் திருவாபரண அலங்காரத்துக்கும் இடையூறு செய்யும் வகையிலும் இருக்கும்.

எனவே, திருமஞ்சன உற்சவத்துக்கும், பக்தா்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதா்களின் பாரம்பரிய வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →