கண்டாச்சிபுரம் அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்க கோரி சாலை மறியல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வி.சித்தாமூரில் ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வி.சித்தாமூா் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரக் காலமாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். மேலும் குடிநீா்த் தேவைக்காக அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், முகையூா் ஒன்றியக் குழு மற்றும் ஊராட்சி நிா்வாகத்திடம் எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த வி.சித்தாமூா் கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை காலை பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மறியல் குறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் காவல் நிலையத்தினா் மற்றும் அலுவலா்கள் நிகழ்விடம் விரைந்து வந்தனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா்ப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண்பதாகக் கூறினா். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணவில்லை எனில் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம் என வி.சித்தாமூா் கிராமத்தினா் தெரிவித்தனா்.