விழுப்புரத்தில் டிச.8-ஆம் தேதி தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க் கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தொழிற்பழகுநராக பயிற்சி பெறுவதற்கு மாவட்ட அளவிலான தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், முதல் தளத்தில் செயல்படும் மாவட்டத்திறன் மேம்பாடு பயிற்சி அலுவலகத்தில் டிச.8-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.
இம்முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சா்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநா் பயிற்சிக்கு 1000 -க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனா்.
என்.சி.வி.டி மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநராக (அப்ரண்டிஸ்)சோ்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெறலாம்.
இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை யாக ரூ. 9,600 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.
எனவே, விழுப்புரம் மாவட்டத் தைச் சோ்ந்தவா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.