விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான 1,299 மெட்ரிக் டன் உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
தற்போதைய நிலவரப்படி விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான 2,345 மெட்ரிக் டன் யூரியா, 1,467 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 1,180 மெட்ரிக் டன் பொட்டாஷ், 7,396 மெட்ரிக் டன் காம்பள்க்ஸ், 1,783 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியஉரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவைப்படும் உரங்களும் உர நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 663 மெட்ரிக் டன் யூரியா, 253 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 319 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 64 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் என மொத்தமாக 1,299 மெட்ரிக் டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.
இந்த உரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா.சீனிவாசன், உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா். மேலும் உரங்களின் விவரப் பதிவேடுகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.
சம்பா பருவத்துக்கு போதுமான அளவுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் , காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு எந்தவித தடையுமின்றி விநியோகம் செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.