விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கம், 6.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் அருகேயுள்ள ரோஷனை காலனி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. ராமு(73), உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கடந்த நவ.12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகளின் வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா், வெள்ளிக்கிழமை ராமு தனது வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன்தங்கச் சங்கிலிகள், ஒரு பவுன் கை சங்கிலி, அரை பவுன் மோதிரம் உள்ளிட்ட ஆறரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இது குறித்த ராமு அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.