ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் மாவட்டமாக கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தையும், கட்டளையையும் நிறைவேற்றும் மாவட்டமாக கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக திகழ்கிறது என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பாராட்டு தெரிவித்தார்.
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் மகாயாகம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வி.கே.மாரிமுத்து தலைமை வகித்தார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மகாயாகத்தில் பங்கேற்று தரிசித்தார். 65 பால்குடங்கள், எண்ணெய் குடங்கள் ஊர்வலத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். தில்லைக்காளியம்மனுக்கு பால் மற்றும் எண்ணெய் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று ரூ.25 லட்சம் மதிப்பிலான 65 பேருக்கு தையல் இயந்திரங்கள், 25 பேருக்கு சலவைப் பெட்டி, 500 பேருக்கு வேட்டி- புடவை, 20 விவசாயிகளுக்கு பூச்சிமருந்து தெளிப்பான், 5 ஆயிரம் மரக்கன்றுகள், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் ஆகியவற்றை வழங்கிப் பேசினார்.
அவர் பேசியதாவது: ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் விழா கடலூர் கிழக்கு மாவட்டத்தை மிஞ்சும் அளவிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களில் பல்வேறு வரலாறு படைத்துள்ளார். மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம், புதிய வீராணம் திட்டம், மிக்சி-கிரைண்டர் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் வாழுகின்ற வரலாறாகும். ஆனால் கருணாநிதியின் வரலாறு ஏசும் வரலாறாகும். அவரது பழைய வீராணம் திட்டம் ஏசும் திட்டமாகும். புதிய வீராணம் திட்டம் பாராட்டும் திட்டமாகும். ஜெயலலிதா தலைமையிலான அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்களை பாதுகாக்கும் அரசாக திகழ்க்கிறது என எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வி ராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), செல்விராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.எஸ்.சேகர், மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி செயலாளர் பாலுபச்சையப்பன், மாவட்ட துணைச்செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.