நடப்பாண்டில் 1.20 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1.20 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 96,148 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
டலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1.20 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 96,148 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
கடலூர் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி கம்பளிமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார் பேசுகையில், "முதல்வரின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 84,468 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 1.20 லட்சம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டு இதுவரை 96,148 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோன்று விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 31,164 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6,492 பயனாளிகளுக்கு ரூ.20.21 கோடி நிதியுதவியும், 25.968 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 10,971 பயனாளிகளுக்கு 43,884 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா கறவை மாடுகள் 1,800 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 3 பேருக்கு வீட்டுமனைப் பட்டா மாற்றமும், 14 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 8 பேருக்கு உழவர் பாதுகாப்புத் திட்ட நிதி உதவியும், 32 பேருக்கு விதவை உதவித்தொகையும் மற்றும் 4 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.16 லட்சம்' என்றார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பாதாளம், ஆதிதிராவிடர் நல அலுவலர் குணசேகரன், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர் அன்பழகி, வேளாண்மை துணை இயக்குநர் அசோகன் வட்டாட்சியர் ராஜாராம், மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கோதை செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.