சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2016-17-ஆம் கல்வி ஆண்டில் சுமார் 2,15,812 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டு அனுமதி சேர்க்கை பெற்றனர். நிகழ் கல்வியாண்டில் சுமார் 1.5 லட்சம் பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வேளாண் படிப்புகள், பொறியியல் படிப்புகள், கல்வியியல் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை, யோகா, மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டயப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நிகழ் கல்வியாண்டில் பல புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம், தொலைதூர கல்வி மைய இயக்குநர் எம்.அருள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். மாணவ, மாணவிகள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட 42 படிப்பு மையங்களிலும், கேரள மாநிலம் அலப்பி, திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, எர்ணாகுளம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 17 படிப்பு மையங்களிலும் நேரடி அனுமதி சேர்க்கை பெறலாம். மேலும், மாணவர்கள் www.audde.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.