பலத்த மழை: கடலூரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
கடலூரில் இரு நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது.
கடலூரில் இரு நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது.
வடகிழக்குப் பருவமழை கடந்த 27- ஆம் தேதி தொடங்கியதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை இரவில் தொடங்கிய மழை, செவ்வாய்க்கிழமை வரை பெய்தது. புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதிலும், ஒருசில இடங்களில் லேசான மட்டுமே மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த கால நிலையே நிலவியது.
கடந்த இரு நாள்களில் பெய்த பலத்த மழையால் கடலூர் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர்.
கடலூர் நகரம் மற்றும் கோண்டூர் ஊராட்சிப் பகுதிகளான ராம்நகர், கண்ணையா நகர், ரட்சகர் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட 20 நகர்களில் தண்ணீரை வெளியேற்ற 4 அடி நீளம் 6 அடி ஆழத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், நகரில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், பின்வாசலில் ஏணி வைத்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. மேலும், தெருக்களுக்குள் செல்லவும் போதுமான வழி அமைக்கப்படாததால் இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கடலூர் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 4 -ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும். புதன்கிழமை மழை சற்று குறைந்து காணப்பட்டாலும் மழை மீண்டும் தொடரும் எனத் தெரிவித்தது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 87.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): பரங்கிப்பேட்டை 70, அண்ணாமலை நகர் 53.40, வானமாதேவி 47, கொத்தவாச்சேரி 46, புவனகிரி 42, காட்டுமன்னார்கோவில் 39, லால்பேட்டை 36, சிதம்பரம் 34.60, சேத்தியாத்தோப்பு 29.80, பண்ருட்டி 29, ஸ்ரீமுஷ்ணம் 24, குப்பநத்தம் 20.20, வேப்பூர் 20, விருத்தாசலம் 18.50, காட்டுமயிலூர் 18, கீழச்செருவாய் 15, பெலாந்துரை 13, லக்கூர் 12.40, தொழுதூர் 9 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இந்த நிலையில், கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், புதன்கிழமை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.