அத்தியாவசியத் துறைகளுக்கு சிலிண்டர் முன்னுரிமை! - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பற்றி...
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து உணவகங்கள், தொழிற்சாலைகள் என வணிக நிறுவனங்கள் இதுபற்றி கவலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
"போர்ச் சூழலால் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய வீட்டு உபயோகமற்ற துறைகளுக்கு கேஸ் சிலிண்டர்கள் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போதைய போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் எல்பிஜி உற்பத்தியை மேம்படுத்தவும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க முன்னுரிமை வழங்கப்படும்.
பிற அத்தியாவசிய துறைகளின் கோரிக்கைகள் எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தகுதி, தேவை மற்றும் தயாரிப்பு அடிப்படையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.