ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 1983-ஆம் ஆண்டிலிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு டீசல், ஆயுதம் கொண்டு செல்வதாகவும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறியும் சுமார் 800 பேரை சுட்டுக் கொன்றுள்ளது. தற்போது வரை தாக்குதல் நிற்கவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள், தங்களது வலைகளை அப்படியே விட்டுவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பியுள்ளனர்.
சரணடையும் விதத்தில் கரை திரும்பிய மீனவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் பிச்சை என்பவர் பலத்த காயமடைந்துள்ளார்.
ஒரு படகையும், அதிலிருந்த மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து வைத்து, கொடூரமாகத் தாக்கியதாக கரைக்குத் திரும்பிய மீனவர் இருதயம் கூறியுள்ளார். சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம், கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவே செயற்கையாக மீனவர் பிரச்னையை நீட்டித்து வருவது புலனாகிறது.
இல்லை என்றால் இந்திய கடற்படை தமிழக மீனவரை சுடுவதற்கு என்ன காரணம்? இதற்கான பதிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.