வேளாண் துறை திட்டப் பணிகள் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை கூடுதல் இயக்குநர் செந்தாமரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து வேளாண்மை கூடுதல் இயக்குநர் செந்தாமரை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் வட்டாரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருமாணிக்குழி விவசாயி கருணாநிதிக்கு ரூ.60
ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர் உழவு கருவி வழங்கினார்.
உயிர் உர உற்பத்தி மையப் பணிகள், திரவ உயிர் உற்பத்தி அலகினை பார்வையிட்டு அதனை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்.
பின்னர், திருப்பாதிரிப்புலியூரில் விவசாயி ராமச்சந்திரன் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளை பொன்னி விதைப் பண்ணையை பார்வையிட்டு இயற்கை வேளாண்மை குறித்து ஆலோசனை வழங்கினார்.
ராமாபுரம் விவசாயி தனசேகர் கரும்புப் பயிரில் அமைத்துள்ள சொட்டு நீர்ப்பாசன வயல்களை ஆய்வு செய்தார்.
பின்னர், அண்ணாகிராமம் ஒன்றியம், புதுப்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் நிலத்தில் அமைத்துள்ள நிழல் வலைக்குடில், கரும்பு ஒரு பருவ சீவல் இயந்திரம், சொட்டு நீர்ப்பாசன வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குநர்கள் கனகசபை, சம்பத்குமார், செயற்பொறியாளர் இளங்கோவன், கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராஜன், அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குநர் மல்லிகா, தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர்.