வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம்: காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்து, கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்து, கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலில் இருந்து வருகிறது.
இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உத்தரவு வழங்கியுள்ளதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை தேசிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, கடலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்ன.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.எஸ்.சந்திரசேகரன், ஆர்.மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.
நிர்வாகிகள் ஓவியர் ரமேஷ், இளஞ்செழியன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கடலூர் நகரத் தலைவர் என்.குமார் வரவேற்றுப் பேசினார்.