குடிநீர் வழங்கக் கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததைத் தொடர்ந்து, குடிநீர் விநியோகம் கடந்த சில நாள்களாக தடைபட்டுள்ளதாம். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு காலிக் குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஓரிரு நாள்களில் சீராகக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.