முகப்பு
கடலூர்

அரசுத் திட்டங்கள் கிராம மக்களைச் சென்றடைய தனிக் குழுக்கள் அமைக்கப்படும்: ஆட்சியர் 

அரசுத் திட்டங்கள் கிராம மக்களைச் சென்றடையும் வகையில் தனிக் குழுக்கள் அமைக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறினார். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:38 am IST
பகிர்:

அரசுத் திட்டங்கள் கிராம மக்களைச் சென்றடையும் வகையில் தனிக் குழுக்கள் அமைக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறினார்.
 கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பாரத பிரதமரின் கிராம சுயராச்சிய இயக்கத்தின் கீழ் அரசின் திட்டங்களை கிராமங்கள்தோறும் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கான விளக்கக் கூட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பேசியதாவது: அரசின் திட்டங்கள் கிராமங்கள்தோறும் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்காக, மக்கள் தொகை கணக்கீட்டின்படி கிராமங்கள்தோறும் 200 குடும்பங்களுக்கு ஒரு குழு வீதம் நியமிக்கப்படும். அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இணைப்பு, தனிநபர் கழிப்பிடம், அவரவர்களின் நிலங்களில் சொட்டு நீர்ப் பாசன வசதி, குடும்பத்தில் உள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட விவரம், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறப்பட்ட விவரம், படித்த இளைஞர்களுக்கான தொழில்பயிற்சி தேவை உள்ளிட்ட விவரங்களை கணக்கீடு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் அரசின் அனைத்துத் திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள கிராம மக்களுக்கு சென்றடைந்து பயன்பெற ஏதுவாக இருக்கும்.
 பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மின்சார சிக்கனமுள்ள விளக்குகள், உபகரணங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது, செüபாக்கியா யோஜனா திட்டத்தின்கீழ் 2018-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கச் செய்வது. பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சுரஷா பீமா யோஜனா திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு இந்தக் குழுவினர் மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
 கூட்டத்தில், சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், உதவி இயக்குநர் (வேளாண்மை) சு.பூவராகன், உதவி இயக்குநர்(தோட்டக்கலை) ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.குர்ஷித்பேகம், சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.