செம்பேரி வெள்ளாற்றில் ஆட்சியர் ஆய்வு
செம்பேரி வெள்ளாற்றில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
செம்பேரி வெள்ளாற்றில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பெண்ணாடம் அருகே உள்ள செம்பேரி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியினர் வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இயக்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தட்டிக்கேட்டனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அந்த இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த செம்பேரி கிராமத்தினர் அரியலூர் மாவட்டம், தெத்தேரி பகுதிக்குச் சென்று கடத்திச் செல்லப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரும் காயங்களுடன் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செவ்வாய்க்கிழமை செம்பேரி கிராமத்துக்குச் சென்றார். அங்குள்ள வெள்ளாற்றில் மணல் கடத்தப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார். ஆய்வின்போது, கனிம வளத் துறை துணை இயக்குநர் விஜயலட்சுமி, விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.