ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் தலித் சக்திவேல், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் மற்றும் காடாம்புலியூர் காந்திநகரைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரில் சுமார் 700 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, போதுமான இட வசதி இல்லாததால் ஆதிதிராவிடர் நலத் துறை மூலமாக 4.15 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2012-ஆம் ஆண்டில் 75 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவாக வழங்கப்பட்டது.
ஆனால், இதுகுறித்து ஒரு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன.
தற்போது அதே இடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். இந்தப் பகுதியில் சிலர் வீடு கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் உண்மையான பயனாளிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தனர்.