என்.எல்.சி.யில் ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தென்மண்டல ஜ.ஜி. ஆனந்தமோகன் உத்தரவின்படி, என்.எல்.சி. சிஐஎஸ்எப் யூனிட் பிரிவில் ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தென்மண்டல ஜ.ஜி. ஆனந்தமோகன் உத்தரவின்படி, என்.எல்.சி. சிஐஎஸ்எப் யூனிட் பிரிவில் ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.
மத்திய அரசு இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித இனத்துக்குத் தேவையான பிராணவாயுவை அதிகரிக்கச் செய்தலுக்காக "வன உற்சவம்' எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, என்.எல்.சி. இந்தியா நிறுவன மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை சார்பில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற தொடக்க விழாவில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை ஒரே நாளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மூன்று சுரங்கங்கள், மூன்று அனல்மின் நிலையங்கள், பயிற்சி விடுதி, உர ஆலை தலைமை முகாம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் புளிய மரம், புங்கன் மரம், அசோக மரம், மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
முன்னதாக, உரஆலை முகாம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் என்.எல்.சி. யூனிட் பிரிவு முதுநிலை கமாண்டர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை கமாண்டர் சுஜய் குப்தா, சந்தர்வீர் சிங், உதவி கமாண்டர்கள் தபன்வாதுவ, பானுபிரகாஷ், நீலேஷ் கெய்க்வாட், சஞ்சய் பிரசாத், ஆய்வாளர் பழனிவேல் மற்றும் என்.எல்.சி. இந்தியா நிறுவன உயரதிகாரிகள், தொழிலாளர், ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.