முகப்பு
கடலூர்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிறைவு

கடலூர் மாவட்டம் நெய்வேலி லிக்னைட் அரங்கில் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கடலூர் மாவட்டம் நெய்வேலி லிக்னைட் அரங்கில் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
 நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில், 21-ஆவது புத்தகக் கண்காட்சி லிக்னைட் அரங்கில் நடைபெற்று வந்தது. புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் நிதித் துறை இயக்குநர் ராகேஷ்குமார் தலைமை வகித்தார். இயக்குநர்கள் ஆர்.விக்ரமன், வி.தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.ப.தண்டபாணி முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார்.
 நிகழ்ச்சியில், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு குறும்படத்துக்கான முதல் பரிசு சுலோசனா தேவேந்திரனுக்கும், பிரவீன்,
 அக் ஷாரா ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர்
 வெ.ப.தண்டபாணி வழங்கினார். மேலும், ங்-நர்ன்ஸ்ங்ங்ய்ண்ழ் என்ற குறுந்தகடை ஆட்சியர் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
 பின்னர், மாவட்ட ஆட்சியர் வெ.ப.தண்டபாணி பேசியதாவது: இந்தியாவின் பெரும் நிறுவனமான என்.எல்.சி. லிக்னைட் சுரங்கம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய தேசத்தில் இன்னும் கண்டறியப்படாத வளங்கள் உள்ளன. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தேசத்தின் மின் உற்பத்தித் தேவையை நிறைவு செய்வதுடன், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவுகிறது. அதன் சூரிய ஒளி மின் உற்பத்தி நாட்டின் முக்கிய மைல் கல்லாகும்.
 நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 88 பதிப்பாளர்கள் தங்கள் நிறுவனப் படைப்புகளை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளனர். சுமார் 1.10 லட்சம் பார்வையாளர்கள் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வானது இன்னும் புத்தக வாசிப்பு குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.
 ஊடகத் துறையில் மாற்று பரிமாணங்கள் வந்துவிட்ட நிலையில், நிச்சயம் புத்தகம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், மாணவர்கள் புத்தக வாசிப்புப் பழக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இது கவலை கொள்ளக் கூடிய விஷயம். தொலைக்காட்சி, செல்லிடப்பேசியால் மனச் சிதறல் ஏற்படுகிறது.போட்டி நிறைந்த உலகில் இந்திய மாணவர்களின் கல்வித் தரம் உச்ச நிலையை நோக்கிச் செல்ல இன்னும் பட்டைத் தீட்ட வேண்டிய நிலை உள்ளது.
 இந்த புத்தகக் கண்காட்சி ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். புத்தகங்களுக்குள் செல்லச் செல்ல மிகப் பெரிய அறிவுச் சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் மனித வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷங்கள் மறைந்துள்ளன.
 அதேபோல, மனிதனை மேம்படுத்துவதற்கான கருத்துகள் திருக்குறள், திருமந்திரம், திரு அருட்பா உள்ளிட்ட பல்வேறு தமிழ் நூல்களில் உள்ளன.
 நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு ஈடுபட்டு வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், இந்த நிறுவனத்துக்காக நிலம் வழங்கியவர்களைத் திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதை ஆற்றுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
 நிகழ்ச்சியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத் துணைப் பொது மேலாளர் இ.சீனிவாசன் வரவேற்றார். என்.எல்.சி. இந்தியா நிறுவன இயக்குநர்கள், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அதிகாரி டி.நாதமுனி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.