கடலூரில் கோடை மழையால் தணிந்தது வெப்பம்
கடலூரில் திங்கள்கிழமை கோடை மழை பெய்ததால், இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கடலூரில் திங்கள்கிழமை கோடை மழை பெய்ததால், இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கடந்த மே 28-ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் 29-ஆம் தேதியன்று அதிகபட்ச வெப்பநிலையாக 107.6 டிகிரி பதிவானது. தொடர்ந்து வந்த நாள்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவான நிலையில், திங்கள்கிழமை மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதாவது 103 டிகிரி வெயில் பதிவான நிலையில், மாலை 3 மணிக்கு மேல் மேகமூட்டம் காணப்பட்டது. பின்னர், 4 மணி அளவில் சாரல் மழை பெய்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே சாரல் நின்றதால் மழை பெய்யவில்லையே என்ற வருத்தத்தில் மக்கள் இருந்தனர். எனினும், மேகமூட்டத்துடனேயே இருந்ததால் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5.15 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து இரவில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும், சுற்று வட்டார கிராமங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
வாழைகள் சேதம்: முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், எம்.புதூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 40 ஏக்கர் பரப்பில் வாழை கள் சரிந்து விழுந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.