அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் அமைக்கக் கூடாது: கடலூர் நகராட்சி அறிவுறுத்தல்
கடலூர் நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் அமைக்கக் கூடாதென நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் அமைக்கக் கூடாதென நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் பாரதி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் விளம்பரப் பதாகை வைத்த இளைஞர் அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில், கடலூர் நகராட்சி ஆணையர்
க.சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் நகராட்சிப் பகுதிகளில் சாலையின் ஓரம், சாலையின் நடுப் பகுதி தடுப்புச் சுவர், மின் விளக்கு கம்பங்களில் விளம்பரப் பலகைகளை அனுமதியில்லாமல் வைக்கக் கூடாதென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்திருப்பவர்கள் ஒரு வாரத்துக்குள் உரிய உத்தரவு நகலை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை மூலமாக குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். மேலும், விளம்பரங்களை அகற்றுவதற்கான முழுச் செலவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுமென அதில் தெரிவித்துள்ளார்.