இரு தரப்பினர் மோதல்: 9 பேர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கஞ்சமநாதன்பேட்டை காலனி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஏரிக்கரை அருகே நின்றிருந்த பழனிவேலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செஞ்சிவேல் உள்ளிட்டோர் கிண்டல் செய்தனராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பழனிவேல், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 9 பேரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், தலைமறைவான 13 பேரை தேடி வருகின்றனர்.