சன்மார்க்க அன்பர்கள் ஆர்ப்பாட்டம்
வள்ளலார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் சிவக்குமார் என்ற சிவயோகியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய
வள்ளலார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் சிவக்குமார் என்ற சிவயோகியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, வடலூரில் சன்மார்க்க அன்பர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அருள்பிரகாச வள்ளலார் குறித்து அவதூறாகவும், சுத்த சன்மார்க்க கொள்கைக்கு எதிரான வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வரும், சென்னை கொளத்தூர் புத்தாகரம் பகுதியில் யோகக்குடில் நடத்தி வரும் சிவக்குமார் (எ) சிவயோகியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். வடலூரில் செயல்பட்டு வரும் அனைத்து மதுக் கடைகள், இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மது, இறைச்சிக் கடைகளை அகற்றவில்லை என்றால் அடுத்த பூசத்தன்று மதுக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பார்வதிபுரம் பார்த்திபன், புலவர் ஞானதுரை, மேட்டுக்குப்பம் ஜோதிராமலிங்கம், கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.