சிதம்பரத்தில் கொள்ளிடம் தடுப்பணைக் குழு, வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். கொள்ளிடம் தடுப்புக் குழு மூத்த ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், வர்த்தக சங்கச் செயலர் முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் பங்கேற்றார். அவர் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் உள்ள பெராம்பட்டு, நாகை மாவட்டம் சந்ததோப்பு இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். இதுகுறித்து கடந்த 3.4.2018 அன்று சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் 90 நாள்களில் தடுப்பணை கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
எனவே, வருகிற 25-ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், உப்பு நீர் குடங்களுடன் சென்று மனு அளித்து வரவேற்பது என முடிவு செய்துள்ளோம். மேலும், சிதம்பரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வரர்
எக்ஸ்பிரஸ், அந்தியோதயா ரயில்கள் நின்று செல்லாததைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் அவர். கூட்டத்தில் நிர்வாகிகள் தீபக்குமார், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.