கடலூரில் ரூ.30 ஆயிரம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்திட உணவு பாதுகாப்பு துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நா.தட்சணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சனிக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போடிசெட்டித்தெருவில் உள்ள ஏஜென்ஸிக்கு சரக்குகள் கொண்டு வரப்பட்ட தகவல் கிடைத்ததும், அங்கு சோதனை மேற்கொண்டனர். அதில், 3 பெட்டிகளில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அதன் மாதிரியை சேகரித்து கோவையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனர்.
உணவு பகுப்பாய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை என்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது ஆதாரங்களுடன் உணவு பாதுகாப்புத் துறை வழக்கு தொடரும். இந்த வழக்கில் தொடர்புடையோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.