துணை வேந்தர் நியமன முறைகேடு புகார்: ஆளுநரும், அரசும் விளக்கமளிக்க வேண்டும்
துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, தமிழக ஆளுநரும், மாநில அரசும் விளக்கமளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, தமிழக ஆளுநரும், மாநில அரசும் விளக்கமளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக தமிழக ஆளுநரே கூறியுள்ளார். இது தமிழக கல்வித் துறைக்கு ஆபத்தான செய்தியாகும். எனவே, இதுகுறித்து ஆளுநர் மாளிகையும், தமிழக அரசும் உரிய விளக்கமளித்து தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமரைச் சந்திக்கும் தமிழக முதல்வரின் பயணமானது, மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது மத்திய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.
அதே நேரத்தில், மாநில அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மக்களை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் முடிவுக்கான அடித்தளமாக அமையும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அதே ஆலையாக திறக்கப்படுவதை ஏற்க மாட்டோம். அதே நேரத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வேறு ஆலைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தால் வரவேற்போம். ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மக்களிடம் புரிதலை ஏற்படுத்தி செயல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.