முகப்பு
கடலூர்

குவாரியில் மணல் வழங்கக் கோரி டிராக்டர் உரிமையாளர்கள் முற்றுகை

காட்டுமன்னார்கோவில் அருகே குவாரியில் மணல் வழங்கக் கோரி டிராக்டர் உரிமையாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:39 AM
பகிர்:

காட்டுமன்னார்கோவில் அருகே குவாரியில் மணல் வழங்கக் கோரி டிராக்டர் உரிமையாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே குஞ்சமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் மணல் ஏற்றப்பட்டு, முட்டம் கிராமத்தில் உள்ள மணல் கிடங்குக்கு  கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால், இந்தக் குவாரியில் டிராக்டர்களுக்கு மணல் ஏற்றப்படவில்லையாம். இதுதொடர்பாக, டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாரத்துக்கு 2 நாள்களுக்கு டிராக்டர்கள் மணல் ஏற்ற அனுமதி அளிப்பதாக கூறப்பட்டதாம். 
 இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் சென்றதால் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி முதல் குவாரி மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால், குவாரியில் டிராக்டர்களுக்கு மணல் ஏற்றாமல், லாரிகளுக்கு மட்டும் மணல் ஏற்றப்பட்டதாம். 
இதனால் அதிருப்தியடைந்த டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் முட்டம் கிராமத்தில் உள்ள மணல் சேமிப்பு கிடங்குக்கு சனிக்கிழமை (அக்.20) காலையில் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த  சிதம்பரம் உதவி ஆட்சியர் விசு மகராஜன், காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், டிராக்டர் உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். மேலும், மணல் அள்ள வந்த லாரிகளின் குறுக்கே நிறுத்திய டிராக்டர்களை எடுக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் குவாரியில் மணல் அள்ளும் பணி தடைபட்டது. ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் மணல் அள்ளவில்லை. 
இந்த நிலையில், டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதற்கு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பணித் துறையினர் உறுதி அளித்ததை அடுத்து டிராக்டர்களை உரிமையாளர்கள் எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.