அடுக்குமாடி குடியிருப்பு மேற்கூரையில் திடீர் சேதம்
கடலூரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.
கடலூரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.
கடலூர் வில்வநகரில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீதிமன்ற ஊழியர் மாசிலாமணி (51) என்பவரும் குடும்பத்துடன் அதிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சனிக்கிழமை இரவு மாசிலாமணி தனது மனைவி சித்ரா, மகள்கள் திவ்யஸ்ரீ, சமந்தா ஆகியோருடன் வீட்டுக்கு வெளிப் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டின் மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. குடும்பத்தினர் வெளியில் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அங்கிருந்த சில பொருட்கள் சேதமடைந்தன. இந்தக்குடியிருப்பு கட்டப்பட்டு 28 ஆண்டுகள் ஆன நிலையில் பல்வேறு வீடுகளில் இதுபோன்ற விரிசல்கள் விழுந்து மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளதாம். இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அலுவலர்களுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மற்ற வீடுகளிலும் பழுதுபார்க்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.