கடலூர் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 3 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள "மகிளா சக்தி கேந்திரா' திட்டத்தில் மாவட்ட மகளிர் மையத்துக்கு ஒரு மகளிர் நல அலுவலர், இரண்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியில் சேர்வதற்கு கடலூர் மாவட்டத்தில் இருப்பிடம் கொண்ட பெண் விண்ணப்பதாரர்கள் வருகிற 26-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர்-607 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உறையின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.
மகளிர் நல அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்போர் சமூக அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் மற்றும் அனைத்து மகளிர் நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பெற்றவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கணினியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், களிர் நலனுக்கான பணிகளில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். ரூ.35 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்துக்கு சமூக அறிவியல், மனிதவளம் மற்றும் சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் மற்றும் அனைத்து மகளிர் நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பெற்றவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்குள் இருப்பதோடு, கணினியில் பயிற்சியும், மகளிர் நலனுக்கான பணிகளில் அனுபவமும் பெற்றிருக்கவேண்டும். ரூ.20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.