கடலூரில் ராமசாமி படையாச்சியார் நினைவு மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (செப்.14) நடைபெறுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான ராமசாமி படையாச்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கான மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார். அதன்பின்னர், மணிமண்டபம் அமைப்பதற்கான இடமாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிறிஸ்தவ தேவாலயம் முன் உள்ள பகுதி தேர்வானது. இந்தப் பகுதியில் ரூ.2.15 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா மணிமண்டபம் அமைய உள்ள இடத்தில் நடைபெறுகிறது. விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விழா நடைபெறும் பகுதியில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அதிமுக நகர செயலர் ஆர்.குமரன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் வ.கந்தன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.