கேபிள் இணைப்புகள் துண்டிப்பால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆபரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.ஆனந்தன் தலைமையில், கேபிள் ஆபரேட்டர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து அளித்த மனு விவரம்:
மத்திய அரசின் அனுமதி பெற்று டிசிசிஎல் என்ற டிஜிட்டல் சிக்னல் பெற்று, கடலூர் மாவட்டத்தில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சாதனங்களை வாடகை பெற்று பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் புதன்கிழமை சிக்னல்கள் துண்டிக்கப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து சிக்னலை தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கதிர்காமன், துணைச் செயலர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் செந்தில், சிவலிங்கம், பாண்டியன், ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.