கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளை அமைக்கக் கோரி, ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பண்ருட்டி வட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்காததால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து, பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பண்ருட்டி வட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை உடனடியாக அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக இவர்கள் பண்ருட்டி - கடலூர் சாலையில் உள்ள பயணியர் விடுதியிலிருந்து மாவட்ட அமைப்பாளர் வி.சேதுராஜன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தஷ்ணாமூர்த்தி முன்னிலையில் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் பங்கேற்ற 18 பெண்கள் உள்பட 42 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.