பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களை விநியோகிக்கும் பணி கடலூரில் புதன்கிழமை தொடங்கியது.
கடலூர் மாவட்டத்தில் 7,09,400 குடும்ப அட்டைதாரர்கள், 426 இலங்கைத் தமிழர்களுக்கு இந்த பொங்கல் பரிசை வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
எனினும், நெகிழிப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களைப் பொட்டலமிடுவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், மாவட்டம் முழுவதும் உள்ள 1,420 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களை வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கள்
மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுச் சென்றனர்.
இதனிடையே, பரிசுத் தொகை விநியோகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக தகவல் பரவியது. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு பணம் கிடைக்குமா என்ற கேள்வியுடன் நியாயவிலைக் கடைகளில் திரண்டனர். இதனால், சில இடங்களில் விற்பனையாளருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, பொது விநியோகத் துறையினர் கூறியதாவது: வெள்ளை நிற குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படாது. எனினும், நீதிமன்ற உத்தரவு குறித்த விவரம் தெரியவில்லை. உத்தரவைப் பொறுத்தே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத்
தெரிவித்தனர்.